புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.



''குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலிருந்தே பட்டறை, மில் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியான பணி பயணத்தில் ஒரு அத்தியாயம்தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழிலே நிலைத்து நின்றுவிட்டது. தலைச்சுமையாக, தள்ளுவண்டியில், தரைக்கடையாக மிகப் பெரிய உழைப்பைச் செலுத்திதான் வளர்ந்தேன்.அதிக ரிஸ்க் கொண்டது பழ வியாபாரம். இந்த தொழிலில் விற்பனையில்லை என்றால் பொருளும் மிஞ்சாது, போட்ட முதலீடும் மிஞ்சாது. பழ வியாபாரத்தில் உள்ள ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்;  மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என்று யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவதுகூட ஒரு வகையில் ரிஸ்க்தான். விலை அதிகமாக இருக்கும் என்று கடைக்குள் நுழைய மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என்று நான் தரத் தொடங்கினேன். கோவையில் தொடங்கிய கடை வியாபாரம் நல்லபடியாக இருந்தது. அடுத்து, திருப்பூரில் இதே பாணியில் ஒரு கிளை தொடங்கினேன். அங்கும் மக்களின் ஆதரவு நன்றாக இருக்கவே, அடுத்ததாக சென்னையில் ஒரு கிளை தொடங்க திட்டமிட்டேன்.

சென்னையில் தொடங்கும் முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன். பழம் காய்கறி வாங்குவதுகூட ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என அடுத்தடுத்து தொடங்கிய எல்லா கிளைகளிலும் குளிர்சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என பழ வியாபாரத்தை ஹைடெக்காக மாற்றினேன்.

இப்போது தமிழ்நாட்டில் நாற்பது இடங்களில் கிளைகள் உள்ளது. அடுத்ததாக, கேரளாவில் தொடங்க இருக்கிறோம். 2006-ல் எனது மகன் செந்தில் இந்த தொழிலுக்கு வந்தபிறகு, வெளிநாடுகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இப்போது நாளன்றுக்கு 200 டன்கள் விற்பனையாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக்கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பது என் அனுபவம்.'' 

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.


1983-ல் இந்த வேலைகளை செய்ய நான் பொறுப்பெடுத்துக்கொண்ட பிறகு, குடும்பத் தொழிலாக இருந்ததை விரிவுபடுத்தி ஒரு நிறுவனமாக மாற்றினேன். மருந்துக் கடைகளில் மட்டுமல்லாமல் மளிகைக் கடைகளிலும் விற்பனைக்குத் தந்தோம். மக்களிடம் எளிதில்கொண்டு சேர்க்க, சாம்பிள் சோப் செய்தோம். இது நல்ல விளம்பரமாக அமைந்தது. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும், ஓட்டல்களில் தங்கும் பயணிகளும் ஒருமுறை பயன்படுத்திப் பார்த்துவிட்டு, பிறகு எங்கள் சோப்பை தொடர்ந்து வாங்கத் தொடங்கினார்கள்.

விற்பனை அதிகரிக்கத் திட்டமிட்டு, தமிழர்கள் வசிக்கிற இடங்களில் எல்லாம் மார்க்கெட்டிங் செய்தோம். குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தமிழர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கும் சோப் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம். தற்போது 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக, தைவான் நாட்டில் எங்கள் தயாரிப்புதான் முன்னணி பிராண்ட்.

மருத்துவ குணம் பொருந்திய சோப் விற்பனையில் தனி இடத்தைப் பிடித்ததும், நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமச் சந்தையை உருவாக்கியதும் எங்கள் சாதனையாகவே நினைக்கிறோம். இன்று வெளிநாட்டு நிறுவனங்களின் பல பிராண்டுகள் சந்தையில் போட்டி போட்டாலும், மக்கள் எங்கள் சோப் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகம். உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் வெற்றி நிச்சயம். அதுதான் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த தொழிலை நூறு கோடிக்கும் அதிகமாக டேர்னோவர் செய்யும் நிறுவனமாக மாற்றியிருக்கிறது!'' 

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.


நான் அதிகம் படிக்கவில்லை; ஆனாலும் நான் ஜெயித்தேன். காரணம், என் விடாப்பிடியான உழைப்பு.

ஆரம்பத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தினசரி ஐந்து ரூபாய் கூலிக்கு வேலையில் சேர்ந்தேன். வெளிநாட்டுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதே என் வேலை. அந்த வேலையை செய்துகொண்டிருந்தபோதுதான் எனக்கான திருப்புமுனை வந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு தினசரி பயணிகள் கப்பல் சென்றுவரும். அந்த கப்பலில் செல்கிற வியாபாரிகளுக்குத் தேவையான விசாவை நான் வேலை பார்த்த நிறுவனம் வாங்கித் தந்தது. இந்த விசாவை தர ஒருமுறை நான் ராமேஸ்வரம் போனேன்.

 நான் போன ரயில் ராமேஸ்வரத்திற்கு அருகில் பாம்பன் தூக்கு பாலம் ரிப்பேர் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது.  பஸ் பாலம் அப்போது இல்லை. காலை ஒன்பது மணிக்குள் பயணிகளுக்கான  பாஸ்போர்ட், விசாவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்.
நான் எப்படியாவது இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே ரயில் தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்துவிட்டால் எப்படியாவது துறைமுகத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பாலத்தைக் கடப்பது சாதாரணமாக இல்லை. கடல் சீற்றமாக இருந்தது. இரும்பு பாலத்தின் வழி நெடுக கிரீஸ் தடவியிருந்ததால் கால் வழுக்கியது. திரும்பிப் போகலாம் என்றால் கஷ்டப்பட்டு பாதித் தூரத்தைக் கடந்திருந்தேன். திரும்பிச் செல்கிற தூரத்தை முன்னேறிச் செல்வோம் என்கிற துணிவோடு, சூட்கேஸை முதுகோடு கட்டிக்கொண்டு பாலத்தில் தவழ்ந்தபடி கடந்து போனேன்.

கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்

தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்



நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கான மெச்சூரிட்டி குறைவுதான். எப்படி நடித்தால் படம் ஓடும், எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்யவேண்டும் என்று எனக்கு ஆராயத் தெரியவில்லை. என் வளர்ச்சியில் என் அப்பா கவனம் செலுத்தினார் என்றாலும் வெற்றியின் அடிப்படை எனக்குப் பிடிபடாமலேயே இருந்தது. நடிப்பு, நடனம், சண்டை என சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை சரியாகத்தான் தந்தேன். ஆனால், நல்ல நடிகனாக முன்னுக்கு வரமுடியவில்லை. எவ்வளவு உழைப்பை கொடுத்தாலும் சரியான அங்கீகாரம் இல்லை.

திரைத் துறையின் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது. நடிக்க வந்த காலந்தொட்டு இதுவரை 18 படங்கள் மட்டுமே செய்திருக்கிறேன். ஆனால், என்னோடு சமகாலத்தில் வந்த நடிகர்கள் இன்று முன்னணி நட்சத்திரங்களாகி விட்டனர். இதை பார்க்கும் எனக்கு நான் இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கிறது.
சினிமாவுக்கு வந்துவிட்டோம், இதில் சாதிக்காமல் ஓயக்கூடாது என்கிற மனநிலை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் எனக்கான திருப்புமுனையாக பாண்டவர் பூமி படம் அமைந்தது. அதற்கு பிறகுதான் எனக்கான கதைக் களத்தை சரியாக அமைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
தோல்வி என்று எதுவும் கிடையாது, நாம் வெற்றியை நோக்கி ஓடுகிறோம் என்கிற மனநிலையில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக நம் உழைப்புக்கான பலன் ஒரு நாள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. நமது திறமையின் மீது நமக்கு நம்பிக்கை வரும்போதுதான் வெற்றியும் தேடி வரும். இந்த காலகட்டங்களில் வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
கடைசியாக வந்த 'தடையறத் தாக்க' திரைப்படம் எனக்கு எல்லா மட்டத்திலும் சிறந்த நடிகன் என்று பெயர் வாங்கி கொடுத்தது. எனது திரையுலக வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் இயக்குநர் ஏற்கெனவே எடுத்த ஒரு படம் தோல்வி. எனக்கு வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அவர் எனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தார். நான் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்தேன்.

நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


ஐஸ்கிரீம் கடை, ஓட்டல் நடத்துவது, தமிழகத்திலிருந்து சினிமாவை வாங்கி மும்பையில் திரையிடுவது, புத்தக விற்பனை என ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பல வேலைகள் செய்தும், எதிலும் எனக்கு திருப்தி இல்லை. எனக்கான வேலை இதுவல்ல என்று மட்டும் என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு அந்த வேலையை செய்யப் பிடிக்காமல் அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆனால், நானும் ஒருநாள் வெற்றியாளனாக வலம் வருவேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.
பிழைப்புக்காக மும்பை போய், அங்கிருந்து சென்னை திரும்பியபிறகு தொலைக்காட்சியில் சின்ன சின்னதாக பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். ஆனால், அதன் மூலம் பெயரோ, வருமானமோ எனக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் அமிதாப்பச்சனின் பேட்டியை படித்தேன். 'நீ வெற்றியாளனாக இருக்கும்போது உன் வீட்டில் பூங்கொத்துகள் நிரம்பி வழியும். உன் வீட்டில் பூங்கொத்துகளின் எண்ணிக்கை எப்போது குறைகிறதோ, அப்போது நீ சரியத் தொடங்கிவிட்டாய் என்று அர்த்தம்!’ என நடிகர் ராஜேஷ்கன்னாவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார் அமிதாப்.
இந்த பேட்டி எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியையும் பாய்ச்சலையும் எனக்குள் ஏற்படுத்தியது. அப்போது என் நண்பர் சாய்ராம் நீயா, நானா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நான் இணைந்துகொண்டதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனைக்கான முதல் படி.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி சில வாரங்கள்  கழிந்தபிறகும் வரவேற்பு இல்லாமலே இருந்தது. வரவேற்பு இருந்தால்தானே வாய்ப்புகள் இருக்கும். மீண்டும் புதிய முயற்சிகளோடு வாய்ப்புகள் தேடுவது சாமானிய வேலையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து போன் வந்தது. ''நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்'' என்றார்கள். என் உழைப்பின் மீது முழுநம்பிக்கை வந்த தருணம் அதுதான். எனக்கான களம் இதுதான் என்று எனக்கே நம்பிக்கை கொடுத்தது இந்த நிகழ்ச்சிதான்.

அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


எஸ்.ஐ.பி - முன்பு ஒரு சிலருக்கே தெரிந்த வார்த்தையாக இருந்தது, இன்றைக்கு பலரும் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாக மாறி இருக்கிறது. ஏழையைக்கூட பணக்காரராக மாற்றிவிடும் மந்திர சக்தி கொண்டது எஸ்.ஐ.பி. சிறு துளி, பெரு வெள்ளம் என்பதற்கு இனி எஸ்.ஐ.பி.யை உதாரணமாக சொல்லலாம். இந்த எஸ்.ஐ.பி.யை  பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

நம்மில் பெரும்பாலோர் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள். நம்மால் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை நமது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி சேமிக்க/ முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் அவ்வாறு மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்கிறோம்.

இந்த முறை கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே இருந்தாலும், கடந்த நிதி ஆண்டில் நமது மக்களிடம் மிகவும் பாப்புலராகி உள்ளது. செபி/ ஆம்ஃபி/ கேம்ஸ் அமைப்புகள் தரும் புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட ஒரு கோடி எஸ்.ஐ.பி இன்று உள்ளன.   கடந்த காலத்தில்  மாதமொன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி என்கிற அளவில் எஸ்.ஐ.பி மூலமாக வந்த முதலீடு தற்போது மாதத்துக்கு ரூ.3,500 கோடியை எட்டியுள்ளது. இந்த உயர்வு கடந்த வருடத்தில் பங்குச் சந்தை பெரிய வருமானம் எதுவும் தராத சமயத்தில் நடந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஃபோலியோக்கள் (கணக்குகள்) உள்ளன/ புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்பதும் மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சியைக் காண்பிக்கும் ஒரு அளவுகோலாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பங்கு சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 1,58,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன.  அதே போல், கடன் சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 2,25,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் நம் நாட்டில்  மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை சுமார் 4.80 கோடிக்கு மேல்.

உள்நாட்டு வரத்து அதிகரித்து வருவது, நமது பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய பலமாகும். மேலும், நமது பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தை இது வெகுவாகக் குறைக்கும் – ஏனென்றால் இந்த வரத்து சிறு முதலீட்டாளர் களிடமிருந்து நீண்ட கால முதலீட்டுக்காக வருகிறது.



எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் பல சாதகங்கள் உள்ளன. வாங்கும் விலையை சராசரி செய்வது, சிறு சிறு தொகையாக சேமித்து முதலீட்டைப் பெருக்குவது, முதலீட்டு ஒழுக்கத்தை கொண்டு வருவது, சென்டிமென்ட்டுகளைத் தவிர்ப்பது, முதலீட்டுக்குப்பின்  செலவு என்ற பழக்கத்தைக் கொண்டு வருவது, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் என பல சாதகங்கள் உள்ளன. எனவேதான் எஸ்.ஐ.பி முதலீடு பல தரப்பட்ட மக்களிடமும் பாப்புலராகி வருகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில், எஸ்.ஐ.பி முறையில் அனைத்து வகை சொத்துக்களிலும் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு,  பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம், வெளிநாட்டு ஃபண்டுகள் போன்ற பல வகையான சொத்துக்களிலும் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உண்டு.

உங்களின் நீண்ட காலத் தேவைகளுக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத் திட்டங்களுக்கு கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, உங்களின் தேவைகளான பண்டிகை காலச் செலவுகள், எமர்ஜென்ஸி ஃபண்டுகள், பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்கள், இன்ஷுரன்ஸ் கட்டணங்கள் போன்றவற்றுக்காக லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வரலாம். எப்போது பணம்  தேவைப்படுகிறதோ, அப்போது பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இப்படி திரும்ப எடுப்பதற்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.

இப்படி முதலீடு செய்து வைக்கும் பணத்துக்கு வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிகமான வட்டி கிடைக்கும். பணம் தேவையென்று சொன்ன அடுத்த நாள் காலையில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்!


ரிலையன்ஸ் போன்ற சில ஃபண்ட் நிறுவனங்கள் விசா டெபிட் கார்டைக்கூட இந்த விதமான திட்டங்களுடன் வழங்குகின்றன. ஐசிஐசிஐ போன்ற இன்னும் சில நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களுடன் இணைத்து மெடிக்கல் எமர்ஜென்ஸி செலவு வசதிகளையும் வழங்குகின்றன.

எஸ்.ஐ.பி-யில் பல விதமான கால இடைவெளிகளில் நம்  முதலீட்டை செய்துகொள்ளலாம். உதாரணமாக, தினசரி, வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டுக்கு/ அரையாண்டுக்கு / ஓராண்டுக்கு ஒருமுறை என பல இடைவெளிகளில் இன்று முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.

மேலும், சில ஃபண்ட் நிறுவனங்கள், எஸ்.ஐ.பி-க்கு மாதத்தில் எந்த தேதியை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஓரிரு நிறுவனங்களில் குறைந்தபட்ச தொகை ரூ 100-ஆக உள்ளது. பல நிறுவனங்களில் குறைந்த பட்சமாக ரூ 500 அல்லது ரூ 1,000 உள்ளது. இன்றைய நிலையில் இந்தத் தொகையில் எந்த இந்தியப் பிரஜையாலும் முதலீடு செய்ய முடியும் என்பதே உண்மை.

அதேபோல், எஸ்.ஐ.பி-யில் குறைந்தபட்ச முதலீடு 6 தவணைகளாக இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது கேன்சல் செய்யும்வரை தொடர்வதற்கு எழுதிக் கொடுக்கலாம்.

தொழில் செய்யும் பலரும், எங்களால் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியாது. எங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று தெரியாது என்று பல காரணங்களைக் கூறி முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். இன்றைய தினத்தில் ஒரு எஸ்.ஐ.பி  மூலம்   முதலீடாகும் தொகை சராசரியாக ரூ.3,000-ஆக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.3,000-யை முதலீடு செய்ய முடியாவிட்டாலும் ரூ.2000-த்தையாவது தொழில் செய்பவர்கள் முதலீடு செய்யலாமே!

எஸ்.ஐ.பி எவ்வளவு நாட்களுக்குப் போடலாம் என்ற சந்தேகம் பலரின் மனதிலும் எழும். எஸ்.ஐ.பி ஆரம்பிக்கும் போது, முடிவு தேதி உங்களின் இலக்குகள் வரையிலான தேதியாக இருக்கட்டும். அல்லது பங்கு சார்ந்த திட்டங்களாக இருக்கும்போது இலக்குகளுக்கு ஓரிரண்டு ஆண்டுகள் முன்னதாக இருக்கட்டும். இல்லையென்றால் முடிவு தேதியை 2099 அல்லது கேன்சல் செய்யும் வரை என்று போட்டுவிட்டால் பிரச்னையே இல்லை.



எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது எண்டோவ் மென்ட்/ யூலிப் பாலிசிகளைப் போல கவலை கொள்ள வேண்டாம். ஒரு மாத நோட்டீஸில் எஸ்.ஐ.பி-யை எப்போது வேண்டுமானாலும் கேன்சல் செய்துகொள்ளலாம். சிலர் 12 மாதத்துக்கு எஸ்.ஐ.பி காலத்தை வைத்துக் கொள்கிறேன்; பிறகு ஃபண்ட் எவ்வாறு செயல் படுகிறதென்று பார்த்து விட்டு புதுப்பித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். நீங்கள் பிஸியாக இருப்பவர் என்றால் அவ்வாறு செய்யாதீர்கள்! பல சமயங்களில்  தொடர்ச்சி விட்டுவிடும்.

எஸ்.ஐ.பி தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது,  இடையில் ஓரிரு மாதங்கள் என்னால் செலுத்த முடியவில்லை என்றால் ஏதும் பிரச்னை ஆகிவிடுமா என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழும். அவ்வாறு ஓரிரு மாதங்கள் செலுத்த முடியாமல் தவறும்போது,  மியூச்சுவல் ஃபண்டிலிருந்து உங்களுக்கு ஏதும் அபராதம் விதிக்கப்படாது. உங்கள் வங்கி தான், உங்கள் கணக்கில் பணம் இல்லாமலிருந்து இ.சி.எஸ் (ECS) மறுக்கப்பட்டதற்காக (reject) அபராதம் விதிக்கும்.

ஒரு மாதம் பணம் கட்டத் தவறினாலும், மியூச்சுவல் ஃபண்டுகள் அடுத்த மாதத்திலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ மெட்டிக்காக பணம் எடுத்து விடும். நீங்கள் கட்டத் தவறிய தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திரும்ப எடுக்காது.  வேண்டுமானால்,  நீங்கள் ஒரு செக் கொடுத்து அல்லது ஆன்லைன் மூலமாக கட்டாமல் தவறவிட்ட தொகையை மீண்டும் கட்டலாம்.

ஐசிஐசிஐ போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எஸ்.ஐ.பி பாஸ் (pause) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன - எஸ்.ஐ.பி முதலீட்டில் ஒரு முறை 1 – 3 மாதங்களுக்கு பாஸ் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம்.

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தொடர்ச்சியாக மூன்று முறை எஸ்.ஐ.பி தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாமல் போகும்பட்சத்தில், எஸ்.ஐ.பி-யை கேன்சல் செய்து விடுகின்றன.

எஸ்.ஐ.பி முறையில், உங்களது தேவைக்கு ஏற்றாற்போல முதலீடு செய்வதற்காக சில நல்ல திட்டங்களை பரிந்துரை செய்து உள்ளோம். எஸ்.ஐ.பி என்கிற உன்னதமான முதலீட்டு உபகரணத்தை பயன்படுத்தி   அனைவரும் வளம் பெறுவோம்!

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?



உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் நமது இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67வது இடம் பிடித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளி பதக்கத்தையும், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மலிக் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்ததால் இவர்களுக்கு பணம், கார், வீடு என பரிசு மழையில் நனைந்து வருகிறார்கள்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயராவது இடம் பெறுமா என ஏங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் தங்களுடைய திறமையை உலகிற்கு நிரூபித்து இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த வீர மங்கைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக்-க்கு ஊக்கத்தொகையாக எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் எந்தவித தவறும் இல்லை.

ஆனாலும், "விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான பரிசுகளுக்கு வருமான வரி பிடித்தம் உண்டா?" என்பது குறித்து சென்னை, சுண்ணாம்புகொளத்தூரைச் சேர்ந்த விகடன் வாசகர் ஒருவர் இது குறித்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். இவருடைய கேள்வி சரியா? விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகைகளைப் பற்றி எல்லாம் பேச வேண்டுமா என்பதை தவிர்த்து இது குறித்து உண்மையான விவரம் தெரிந்துக்கொள்ள கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

"விளையாட்டு வீரர்களுக்கு வருமானம் என்றாலே அவர்களுக்கும் வரி பிடித்தம் என்பது நிச்சயம் உள்ளது. இந்தியாவில் பணமாக பரிசுத் தொகை கிடைத்தால் வருமான வரியாக 30% செலுத்த வேண்டும். இதுவே பிஎம்டபுள்யூ அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் கார் என ஒரு பொருளாக விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டால் அதற்கான தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழங்கப்படும் எந்தவிதமான பரிசுத்தொகை அல்லது பொருளுக்கு வரி பிடித்தம் என்பது இல்லை.

வெளிநாடுகளில் நமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகைக்கும் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், இது நாட்டுக்கு நாடு மாறுபடும். வெளிநாட்டில் நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கிறது என்றால் அது அந்த நாட்டின் சட்டத்தைப் பொறுத்து வரி பிடித்தம் என்பது இருக்கும். சில நாடுகளில் பரிசுத் தொகைக்கு வரி பிடித்தம் என்பதே கிடையாது; ஆனால், இந்தியாவுக்கு வந்தவுடன் அதற்கான வரிப் பணத்தை கட்ட வேண்டும்.

அதேசமயம் சில நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுகளுக்கு வரி பிடித்தம் என்பது உள்ளது. வீரர்களுக்கு அந்த நாட்டில் 10 சதவிகிதம் வரி பிடித்ததற்குப்போக இந்தியாவில் மீதி வரி பணத்தை செலுத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே வரி மேல் வரி கிடையாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதி வரிப் பணத்தை இந்தியாவில் கட்ட வேண்டும்" என்றார்.

கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளைக் கொண்ட வீர மங்கைகள் வருமான வரி பிடித்தம் போக கொஞ்சம் பரிசு மழையிலும் நனையட்டுமே!

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.



''ஆட்டோமொபைல் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை விட்டுவிட்டு துணி பிஸினஸில் இறங்கினேன். வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே முதலீடாகப் போட்டு தொழிலைத் தொடங்கினேன். புதிய துறை, போதிய அனுபவமில்லை என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு பிஸினஸில் அடியெடுத்து வைத்தேன்.

அந்த நாட்களில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி உள்ளூர் மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பியிருந்தது. இதையும் தாண்டிய சந்தையிருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும் என்பதால், ஏற்றுமதி செய்வோம் என்கிற யோசனையில் உழைக்கத் தொடங்கினேன். உலகத் தரத்திற்குத் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில்  தெளிவாக இருந்தேன். ஆர்டர்கள் தேடிவரும் அளவிற்கு  நாம் வரவேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது.

தொழில் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் என்னோடு இணைந்து தொழில் செய்தவர் ஏமாற்றியதால் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராத இந்த வீழ்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது. தொழிலில் மீண்டும் நிலைத்து நிற்க முடியுமா என்கிற பயம் ஒருபக்கம். மீண்டும் முதலீடு திரட்டவேண்டும், சந்தையைப் பிடிக்கவேண்டும் என்கிற நெருக்கடி இன்னொரு பக்கம். அதனால் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த நேரத்தில்தான். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்த்தேன். இந்த விடாப்பிடியான உழைப்பினால் விட்ட இடத்தைப் பிடித்தேன்.

ஆரம்பத்தில் உற்பத்தி சார்ந்த வேலைகள் மட்டுமே எனக்கு தெரியும், மார்க்கெட்டிங் தெரியாது. இதற்காக நானே பல இடங்களுக்கு ஆர்டர் கேட்டுச் சென்று பழகினேன். புதிய டிசைனிங், புதிய டெக்னிக் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்கவேண்டி இருந்தது. இப்போதுகூட வேலை நிமித்தமாக வெளிநாடு செல்கிறபோது இத்துறையில் நிகழும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் முனைப்பு காட்டுவேன்.  

நாமே பார்த்து ஆரம்பித்தத் தொழில் இது. இதில் வெற்றி பெற முடியவில்லை என்றால் வேறு எதிலும் வெற்றி பெற முடியாது என்கிற வேகம்தான் என் வெற்றிக்குக் காரணம். அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிகள், மின் தட்டுப்பாடு, சாயப்பட்டறை பிரச்னை போன்ற பிரச்னைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்கிற தன்னம்பிக்கைதான் என்னை இன்னும் வேகம் குறையாமல் இயக்கிக்கொண்டிருக்கிறது.'' 

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்


''மாதம் 6,500 ரூபாய் சம்பளத்தில் கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்தேன். வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த பிஸினஸ்மேன்களின் கதைகளை அடிக்கடி வகுப்பில் சொல்வேன். இந்த கதைகளை நாமே ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று யோசித்து, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

ராயப்பேட்டையில் என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தியதில் அடுத்து இன்னொரு மருந்துக் கடை, பல்பொருள் கடை என்று விரிவுபடுத்தினேன். இதில் எதிர்பார்த்த அளவு ஏற்றமில்லை. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற யோசனை இருந்த சமயத்தில் என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம்தான் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவைக்கிறது என்று அறிந்து, அதே மாதிரி ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த சமயத்தில்தான்.
இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனடியாக தயாரிக்கக் கூடிய நொறுக்குத்தீனிகளைத் தந்தோம். அதிலும் முக்கியமாக, வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992-ல் நான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக பிஸினஸ்மேன் ஆனேன்.
என் முதல் ஓட்டலை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். பொதுவாக ஓட்டலுக்கு வருபவர்களை உட்கார வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் வாடிக்கையாளர் சுயசேவை என்று தொடங்கினேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தரமுடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து என் ஓட்டலின் வளர்ச்சி, வேகம் கொண்டது.
முதலில் சென்னையிலேயே வேறுவேறு பகுதிகளில் ஓட்டல்களைத் தொடங்கினேன். பிறகு பெங்களூர், சிங்கப்பூரிலும் ஓட்டலைத் தொடங்கி இன்று துபாய் வரை செல்ல திட்டமிட்டு வருகிறோம். மொத்தமாக 18 ஓட்டல்களில் ஆண்டு டேர்னோவர் 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
பேராசிரியராக எனது பணியினைத் தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, நல்ல மாணவர்களை உருவாக்கி இருந்திருப்பேன். ஆனால், இன்று என் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். எனக்காக மட்டுமின்றி, அவர்களுக்காகவும் நான் உழைக்கிறேன்!''.  

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.




''கல்லூரியில் படிக்கும்போதே வீடு வீடாக வீடியோ கேசட் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பேன். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களோடு எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. கேபிள் டி.வி வந்தபோது அவர்கள் எல்லோருமே என்னை அந்த தொழிலை செய்யச் சொன்னார்கள். அதற்குத் தேவையான டிஷ், ஒயர்கள் வாங்ககூட என்னிடம் பணம் இல்லை.


டெபாசிட் பணம் திரட்டி இறங்கலாம் என்று நினைத்த நான் எங்கள் பகுதி மக்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டேன். இன்னொரு பெரிய நிறுவனம் ஐநூறு ரூபாய் டெபாசிட் தந்தாலே இணைப்பு தருவதாகச் சொன்னது. ஆனால், எங்கள் பகுதி மக்கள் ஒவ்வொருவரும் 1,500 ரூபாய் தந்து என்னை தொழில் தொடங்க சொன்னார்கள். அதுதான் என் வாழ்வின் முதல் திருப்புமுனை.
அடுத்து வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்க யோசித்தபோது, என் நண்பர்கள் கால் டாக்ஸிகளுக்கான வயர்லெஸ் திட்டம் பற்றி சொன்னார்கள். இதற்காக   பெங்களூருவுக்குப் போனேன். கால் டாக்ஸிகளுக்கு அங்கு இருந்த வரவேற்பை பார்த்த நான், அதை ஏன் சென்னையில் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால், மோட்டார் தொழிலை பழகாமல் செய்யக்கூடாது என பலரும் பயமுறுத்தினார்கள். நான் துணிந்து என் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ஐம்பது கார்களை வாங்கி நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தொழில் சிறப்பாக இல்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நஷ்டம். ஐம்பது கார்களை நூறு கார்களாகப் பெருக்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருந்தது.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.  அந்த நூறு கார்களையும் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக்கிவிடுவது என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஓட்டுபவர்களுக்கே இதில் நம்பிக்கை இல்லை. போகப் போக இத்திட்டம் நல்ல பலன் தந்தது. ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க, நிறுவனமும் வளர்ச்சி கண்டது. இந்த நெட்வொர்க்தான் என் பலம்.
இதன்பிறகுதான் திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என விரிவடைந்தோம். இன்று சுமார் ஆறாயிரம் கார்கள் எனது நிறுவனத்தின் மூலமாகச் சுற்றி வருகின்றன. கால் டாக்ஸி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட சொந்த வாகனங்களை வைத்திருக்கவேண்டும் என்கிற விதிமுறைகளை உடைத்ததே எங்களது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால்கூட எங்களால் போட்டி போட முடியும்!''

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!






விற்பனையில் 15% லாபம்

''வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்' என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால்  வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.



ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.



தயாரிக்கும் முறை  கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.




ஃபைனான்ஸ்

சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்

இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.



மானியம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.



ஆட்கள்

முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.




இயந்திரம்

இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.



வார்ப்பு அளவுகள்

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)



சாதகமான விஷயம்

சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.



ரிஸ்க்

தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - திருப்பூர்- பனியன் சந்தை

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - திருப்பூர்


உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர்பார்ப்பிற்கு  தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்பதால் இந்த பிஸினஸ் ரேஸில் வீழ்ந்திடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பூர் குதிரை.
இந்த பனியன் பிரதேசத்தில் 'காதர் பேட்டை’ என்றொரு ஏரியா உங்களுக்குத் தெரியுமா? திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டை 'செகண்ட்ஸ் பனியன்’ என்றழைக்கப்படும் சிறிய அளவிலான டேமேஜ்களுடைய பனியன் துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஏரியா. இந்த பேட்டையின் ஓராண்டு டேர்ன் ஓவர் சுமார் சில நூறு கோடிகளைத் தாண்டுமாம்.
அப்படி என்னதான் நடக்கிறது காதர் பேட்டையில்? என்று இறங்கி அலசினோம்.  பிளாட்ஃபார்ம் கடையில் ஆரம்பித்து மெகா ஷோரூம்கள் வரை இந்த செகண்ட்ஸ் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் அறுநூறுக்கும் மேல் இருக்கின்றன.
எப்படி உருவானது இந்த காதர் பேட்டை என்பதுகுறித்து சொன்னார் 'திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன்’ துணைத் தலைவரான நாகராஜ்.
''1965-ம் ஆண்டுவாக்குல இந்த காதர் பேட்டை உருவாச்சு. திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகளுக்கு பல நாடுகள்ல இருந்து டி-ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், நைட் பேன்ட்ஸ் மாதிரியான துணிகளை தயாரிச்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு லட்சம் பீஸ் ஆர்டர் கிடைச்சதுன்னா, ஒரு லட்சத்து பத்தாயிரம், இருபதாயிரம்னு தயாரிப்பாங்க கம்பெனி ஓனர்கள். காரணம், சில துணிகள் மெஷின்ல சிக்கி கிழிஞ்சிடும், மெஷின்ல உள்ள ஆயில் பட்டுடும். இது மாதிரி பிரச்னைக்குள்ளான பீஸை ஏற்றுமதி பண்ண மாட்டாங்க.

இப்படி கழிக்கப்பட்ட துணிகளை குறைஞ்ச விலையில மொத்தமா வாங்கிட்டு வந்து அப்படியேயும் அல்லது ஓட்டை விழுந்த இடத்துல பேட்ச் ஒர்க் பண்ணியும், ஆயில்பட்ட இடத்தை வாஷ் பண்ணியும் விற்பனை செய்யுறதுதான் காதர் பேட்டை பிஸினஸ் ஸ்டைல்'' என்றார் நாகராஜ்.
''நல்ல குவாலிட்டியான டி-ஷர்ட்டை ஷோரூம்ல போய் வாங்கினா ஐநூறு, அறுநூறு ரூபா சொல்லுவாங்க. ஆனா, அதே டி-ஷர்ட் சின்னதா ஒரு ஓட்டையோட இருக்குதுன்னா, இந்த காதர் பேட்டையில வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான ஜட்டி 10, 15 ரூபாயில் ஆரம்பித்து, பெரியவர்களுக்குத் தேவைப்படுகிற துணிகள் வரை மிகக் குறைந்த விலையில் இங்கு வாங்கிவிடலாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் சமயங்களில் புதுத் துணிகள் பிஸினஸுக்கு இருக்கிற வரவேற்புக்கு நிகரான டிமாண்ட் இங்கேயும் இருக்கும்'' என்றும் சொன்னார் அவர்.
''காதர் பேட்டையில வெறும் சில்லறை விற்பனைகள் மட்டுமல்ல, மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு போயி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல விற்கிற பிஸினஸையும் ஆயிரக்கணக்கான ஆளுங்க பண்ணிட்டிருக்காங்க'' என்கிறார்கள் இங்கு கடை நடத்தும் வியாபாரிகள்.
இந்த செகண்ட்ஸ் துணிமணிகளை நம் வியாபாரிகள் வாங்கிச் செல்வது ஒருபக்கமிருக்க,  சமீப காலமாக வெளிநாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெரிய அளவில் வாங்கிச் சென்று, நைஜீரியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம். ''இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரம் கெடுவதோடு, அரசாங்கத்தின் வருமானமும் குறைகிறது. முதலில் இவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் செகண்ட்ஸ் வியாபாரிகள்.
அடுத்தமுறை திருப்பூர் போனால் காதர் பேட்டைக்குப் போக மறக்காதீர்கள்!

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்



வீடு முழுக்க என்னதான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும், ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான்.

பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே அழகுதான்.
இந்த ஊரில் இதுதான் முக்கியமான தொழில் என்பதால், இதன் பின்புலத்தை அறிந்துகொள்ள நூற்றாண்டு கண்ட ராயல் லுக் கடையின் உரிமையாளர் முகமது அப்பாஸிடம் பேசினோம்.
''எங்க தாத்தா காலத்தில் ஆரம்பமானது இந்த தொழில். கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலைச் செய்து வருகிறோம்.

சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் எங்களுக்கு நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.  
 இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை செய்கிறார்கள்.

வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் தருகிறார்கள்!.

இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வது மட்டுமல்ல, தேவைகேற்ப ஆர்டர் கொடுத்து செய்துவாங்கிக் கொள்ளவும் முடியும். அவர்களிடம் இருக்கும் டிசைன் மட்டுமல்ல, உங்களது விருப்ப டிசைன்களும் செய்துகொள்ளலாம். இயற்கையான நிறத்தில், கலர் இல்லாமல், தரமாக, உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ரேட் பேசி வாங்கிச் செல்ல இந்த ஊருக்கு விசிட் அடிக்கலாம்.