பான் கார்டு எப்போது எல்லாம் தேவைப்படும்?

பான் கார்டு எப்போது எல்லாம் தேவைப்படும்?

50,000 ரூபாய்க்கு மேல் ஒரே நேரத்தில் வங்கியில் பணம் கட்டும் போது அல்லது எடுக்கும் போது உங்களின் பான் கார்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம்.


ஐந்து லட்ச ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது, பான் கார்டு எண்ணை  குறிப்பிட வேண்டும். இதேபோல் தொலைபேசி, செல்போன் இணைப்பு பெறும்போதும் பான் எண் கேட்கப்படுகிறது. மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யும்போது பான் எண் குறிப்பிடுவது அவசியம்.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பான் கார்டு இருந்தால்தான் முடியும்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்திருந்தால் ஏதாவது ஒரு கார்டை வருமான வரித் துறை அலுவலகத்தில் சரண்டர் செய்துவிட வேண்டும். பொதுவாக, ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இந்த கார்டுகளை கொண்டு மோசடி செய்தால், வருமான வரித் துறை விசாரணைக்கு இலக்காகி, அபராதம் விதிக்கப்படுவதோடு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

வழங்கப்பட்ட பான் கார்டு பற்றிய விவரங்களை வருமான வரித் துறை அதன் வெப்சைட்டில் உடனுக்குடன் சேர்த்து விடுகிறது. அதிகார பூர்வமற்றவர்களிடம் போலியாகப் பெறப்படும் பான் கார்டு பற்றிய விவரம் இதில் இடம் பெறாது. அந்த வகையில், தனியார் ஏஜென்டுகள் மூலம் கார்டு வாங்கினால் அதனை வருமான வரித் துறையின் இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.

ஏற்கெனவே, வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட சாதாரண பான் கார்டை தற்போதுள்ளது போல், லேமினேட் செய்யப்பட்ட கார்டாக மாற்ற வழியிருக்கிறது. இதற்கு பழைய கார்டுடன் அல்லது பழைய பான் எண்ணைக் குறிப்பிடும் ஏதாவது ஒரு ஆவணத்துடன், புதிதாக பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். இதற்கும் 96 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

விவசாய வருமானத்தை மட்டும் கொண்டிருப்பவர்கள், வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பதால், அவர்கள் பான் கார்டு வைத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.